வியாபார நுணுக்கம் என்றால் என்ன?

 16ம் நூற்றாண்டு வாக்கில் - பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலிருந்து ஒரு பாடல் அன்றைய வணிகர்களின் வியாபார மேலாண்மை குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.


'புல்லிஓர் பண்டம் கொள்வார் வினவின் அப்பொருள் தம் பக்கல், இல் எனின் இனமாய் உள்ள பொருள் உரைத்து எதிர் மறுத்தும்; அல்லது அப் பொருள் உண்டு என்னின், விலை சுட்டி அறுத்து நேர்ந்தும் சொல்லினும் இலாபம் கொள்வார் - தொன்மரபு இருக்கை சொல்வாம்'


மளிகை கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார், ‘பச்சரிசி இருக்கிறதா?’ என கடைக்காரரிடம் வினவுகிறார்.


வாடிக்கையாளர் கேட்ட அரிசி கடையில் இல்லாத நிலையிலும் கூட கடைக்காரர் ‘இல்லை’ என்று சொல்லமாட்டாராம்.


மாறாக, ‘புழுங்கல் தான் உள்ளது’ என்று சொல்லி விற்பனையைத் தொடர்வாராம்.


மேலும் ‘பச்சரிசி இல்லை’ என்று எதிர்மறையாகச் சொல்வதால் நேரவிரயம் தவிர இலாபம் என்று எதுவுமில்லையென்பதால் ‘புழுங்கல் உள்ளது’ என நேர்மறையாகச் சொல்லி அவரிடம் அதனை விற்க முயல்வாராம்.


அதே போல அவர் கேட்ட அரிசியே இருந்தால் கூட - ‘இருக்கிறது’ எனச் சொல்லமாட்டாராம், மாறாக ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று உரைப்பாராம்.


‘பச்சரிசி இருக்கிறது’ என நேரடியாகப் பதிலுரைத்தால், வாடிக்கையாளர் அடுத்து, ‘என்ன விலை?’ என்று கேட்பார். கடைக்காரர் ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று பதில் சொல்லவேண்டும். அதனால் நேரம் விரயமாகும். எனவே, கேள்விக்கு விடையாக விலையையே நேரடியாகச் சொல்லிவிட்டால் நேரம் மிச்சமாகும், அந்த நேரத்தில் இன்னொரு வியாபாரத்தைக் கவனிக்கலாமல்லவா?.


இதுதான் அப்பாடல் உள்ளடக்கிய மேலாண்மைச் சூத்திரம்!


நம் முன்னோர்கள் எத்தனை அறிவாளிகள் என விளங்குகிறதா? காலங்காலமாக சிறிய பெட்டிக் கடைகளிலும் சந்தைகளிலும் பின்பற்றிய நுணுக்கங்களை வியாபார மேலாண்மை படித்தவர்கள் கூட அறிந்திற மாட்டார்கள்.


சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிப் பதில் பெற வேண்டுமே தவிர - வளவளவென்று தேவையற்றதைப் பேசி காலவிரயம் செய்யாமல் வியாபாரம் செய்யப்பட வேண்டும் - என்பது நம் முன்னோர்கள் பின்பற்றிய நுட்பங்களில் முதன்மையானது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY

Nothing can compete with The knowledge gained from poor, confidence