இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

 நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள்.

இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்கு சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும்.

சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.

பேஸ்புக்கில் அப்லோடு செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமெண்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்சினைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை.

இந்தபிரச்சினையை மருத்துவ ஆலோசனை யின் பேரில் சில வகை தெரபி, மெலட்டோனினை சுரக்கவைக்கும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போனை தள்ளி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

Anger Is The Key To Every Evil

Nothing can compete with The knowledge gained from poor, confidence