திருமுருக கிருபானந்த வாரியார் - ( வாழ்க்கை சுருக்கம் ) -Life History of Kirupananda Variyar

 வேலூர் அருகில் உள்ள. காங்கேய நல்லூரில் 1906 ஆம் ஆண்டு, (25-08-1906) மல்லையதாஸ் பாகவதர், கனகவல்லி அம்மையாரின் புதல்வராக அவதரித்தார் கிருபானந்த வாரியார்.. 



    சோதிடத்தில் வல்லவரான அவரது தந்தை அவர் பிறந்த நட்சத்திரமாகிய சுவாதிக்கு ஏற்றபடி இந்த திருப்பெயரை சூட்டினார். 


    ஐந்து வயதில் வீரசைவ குல நெறிப்படி திருவண்ணாமலை பாணிபாத்ர மடத்தில் சிவலிங்க தாரணம் நடந்தது.. தந்தையார் இவருக்கு சடாஷர மந்திரத்தை உபதேசித்தார். 

    மதுரை திருப்புகழ் சாமி ஐயா அவர்களிடம் சூட்சும சடாஷர மந்திர உபதேசம் பெற்றார்.. ஒருமுறை திருக்கரையூரில் வாரியாரது கனவில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சடாஷர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.. 

    வாரியாருக்கு மூன்று வயதில் தகப்பனாரிடம் எழுத்தறிவு தொடங்கியது. ஐந்து வயதிலேயே ஏடு படித்தார். எட்டு வயதில் வெண்பா பாடினார். பத்து பன்னிரண்டு வயதில் பன்னீராயிரம் பாடல்களை மனனம் செய்யும் ஆற்றலை பெற்றார்.. தகப்பனார் மிகசிறந்த பௌராணிகர்.. அவருக்கு பின், தமது 19 ஆவது வயதில், பாட்டு பாடி கொண்டே சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். 

    பள்ளிக்கு போகாமலே தந்தையையே ஆசானாக கொண்டு, பல பல கற்றார். நடமாடும் பல்கலைகழகமாக திகழ்ந்தார்.. சங்கீதத்தை தந்தியாரிடம் கற்றார். 

    இல்லறம் நல்லறமாக திகழ அவரது தாய்மாமன் மகள் அமிர்தலக்ஷ்மி அம்மாளை மணந்து கொண்டார். 
சென்னையில் மிகுதியாக இசை சொற்ப்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருந்ததால், சென்னையிலேயே குடியேறினார். அப்போது தென்மாடம் வரதாசாரியாரிடம் வீணை பயின்றார். சென்னையில் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார்.. 

    காசி, கேதாரம், அமர்நாத், பத்ரிநாத், நேபாளம், கோகர்ணம், ஸ்ரீ சைலம், மற்றும் பல தலங்களையும் தரிசித்து, எல்லா முக்கிய நகரங்களிலும் சொற்பொழிவாற்றிய பெருமை வாரியாருக்கு உண்டு.. 
தமிழகத்தில் அவர் கால் படாத ஊரே இருக்காது.. இதை தவிர, உலகின் பல நாடுகளுக்கும் சென்று அரும்பெரும் இந்து சமய பணிகளை ஆற்றி மேருவனைய புகழ் கொண்ட மேதகை, வாரியார். 

    " மெய்யன்பர்களே ! ஞானமே வடிவாகிய வயலூர் மேவிய வள்ளலின் தனிபெருங் கருணையினாலே.." என்று சொற்பொழிவை துவங்கினால் பட்டி தொட்டிகளில் வாழும் பாமரர் முதல் பட்டணத்தில் படித்தவர் வரை அனைவரும் தன்னை மறந்து அவர் பேச்சை ரசிப்பர். 

    "வாரி" என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள்.. கிருபானந்த வாரி ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனி கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு.. சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்ய ப்ரபந்தம், பிள்ளைதமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ, அத்தனையையும் கற்றறிந்தவர்.. அருணகிரிநாதரின் அருள் நூல்களான திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, அந்தாதி வகுப்பு என எல்லாவற்றையும் முற்றும் பருகி, எழுத்தெண்ணி, நயம் காட்டி, தங்கு தடையின்றி சந்த ப்ரவாகத்தை கொட்டும் அதி அற்புத ஞானவாரி. 

    " திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களை பற்றி தமிழ் நாட்டில் அறியாதார் இல்லை.. அவர் நாவில் திருப்புகழும், கையில் திருப்பணியுமாக நடமாடும் திருத்தொண்டர்.. நாயன்மார்கள் வரிசையில் வைத்து அவரை அறுபத்து நான்காவது நாயனாராக வழிபடும் சிவநேய செல்வர்களும் இருக்கிறார்கள் " என்று ஆனந்த விகடன் 3-8-1958 இதழில் எழுதியிருந்தார்கள்.. 

    " திருப்புகழ்அமிர்தம் " என்ற மாத இதழை 1936 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கி 37 ஆண்டுகள் நடத்தினார். பல நூறு திருப்புகழ் பாடல்களுக்கு உரை விளக்கம் எழுதி வெளியிட்டார். பல ஆன்மீக இலக்கிய நூல்கள், கதைகளை கட்டுரைகளை எழுதி சமுதாயத்தில் ஒழுக்க நெறியை வளர்த்தவர்.. 

" சொல்லால், செயலதனால், சொற்ப்பொழிவால், கீதத்தால் 
வல்ல அணிப்பூசை மாண்பதனால் - எல்லார்க்கும்
இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமி 
வல்லாண்மை மேலாகு மால் "
- தவத்திரு சுந்தரசுவாமிகள்.. 

காலையானால் ஜபம், தியானம், பின்பு ஸ்நானம், பூஜை, ஓய்வு ஒழிவின்றி கட்டுரைகள் வரைதல், மாலையில் சந்தியாவந்தனம், பிறகு சொற்பொழிவு செய்யும் அறநெறி வாழ்க்கை வாரியாருடையது..

சூரியன் உதிக்காத நாள் இல்லை. அதுபோல, மாலையானால் மாலையும் கழுத்துமாக வாரியார் சொற்பொழிவு ஆற்றாத நாளே கிடையாது.. 

பல கோவில் திருப்பணிகள், அறப்பணிகள், கல்வி கூடங்கள் முதலியன அவரால் செழித்தன. காந்திஜி, ராஜாஜி போன்று இம் மூதறிஞரும் தமக்கு வரும் கடிதங்களுக்கு விடாது பதில் எழுதும் பழக்கமுடையவர். 

மாதம் தோறும், படிக்கும் பல குழந்தைகளுக்கு உதவி தொகை அனுப்புவதை கடமையாக கொண்டிருந்தவர். 

பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளுக்கும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர். காஞ்சி மாமுனிவர் அவருக்கு " சரஸ்வதி கடாக்ஷமிர்தம்" என்று பட்டம் வழங்கினார். 

மேலும், ஷட்பதநாதர், அமுதமொழி அரசு, ப்ரவசன சாம்ராட் .. இப்படி 30க்கும் மேற்பட்ட பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்ற பெருந்தகையாளர்.. 

லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விரிவுரை செய்ய வாரியார் சென்றார்.. அப்போது உடல் நலம் குன்றியதால் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று.. வரும் வழியில் வான் வெளியில் முருகன் திருவடிகளில் கலந்தார். 

8.11.1993 அன்று காங்கேயநல்லூர் முருகன் கோவிலுக்கு எதிரிலுள்ள சரவணப்பொய்கை அருகில், அவரது திருவுடலுக்கு சமாதி கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். 

20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற திருமுருகன் திருத்தொண்டர், திருமுருக கிருபானந்த வாரியார்.

ஔவையின் பாடல் ஒன்றின்படி, 
" சபை ஏறுவதால் நூற்றில் ஒருவர் : 
நல்ல புலவர் ஆதலின் ஆயிரத்தில் ஒருவர் :
பேச்சு வன்மையால் பதினாயிரத்தில் ஒருவர். 
வாரி வாரி வழங்குவதனால் கோடியில் ஒருவர் :"

 
மனைவியிடம் கோபிக்காதீர்கள்
நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை
 
 
இன்சொல் மட்டுமே பேசுங்கள்கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.
 
ஒரே நிமிடத்தில் புண்ணியம்கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
 
கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.
* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய
திருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே
செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான
கடவுள் வழிபாடாகும்.
* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன்.
நம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம்
செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே,
கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க
வேண்டும்.
* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள்
இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி
கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால்
தான் இறைவனைக் காண முடியும்.
 
துன்ப அனுபவம் நன்மைக்காகவே!-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்
கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,
கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில்
துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்
ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.
ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே
என்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார்.
அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை என்பதையே
காட்டுகிறது. இதையே “ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ‘ என்று
வேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க
வேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து
கொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக
இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன்
நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள
முடியாது.
காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல்,
கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம்
நன்மைக்காகவே.



 ஒவ்வொரு நாளும் 
சொல்ல ஒவ்வொரு துதி!


எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.
இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!



வாரியார் சொல்லும் பக்தி
ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காண முடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலே உள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன.
ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.


கிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம் 
 ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும். 
    கிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.
* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.


கிருபானந்த வாரியார்- அமைதி 
உங்கள் மனைவி   *சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.
*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.
*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.
*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.
*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.
*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது


கடவுளை எளிமையாக வழிபடுங்கள்
 உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்


பேசுவதால் பயனேதும் இல்லை  
 * வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.
* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.
* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.
* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

கிருபானந்த வாரியார்- ஏக்கத்துடன் காத்திருப்போம்
 * திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.
* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.

கிருபானந்த வாரியார்- இளமையில் வளையுங்கள்
 * எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.


கிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்
 * ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை