ஏன் எனக்கு மட்டும்?

 நமக்குச் சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது "ஏன் எனக்கு மட்டும் இப்படிச் செய்கிறாய்?"

இந்தக் கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாகப் பதில் தந்திருக்கிறார்.
அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983 ஆம் ஆண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டபொழுது ரத்தம் பெற்றுக்கொண்டதன் மூலமாக அவருக்கு எய்ட்ஸ் வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: "உங்களுக்கு கடவுள் ஏன் இப்படிச் செய்கிறார்?"
இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு:
"WHY ME ?" " ஏன் எனக்கு மட்டும்? "
கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு:
உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய் ?
குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய் ?
சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய் ?
பல பெண்களிடம் தொடர்புடையவர்கள் பலர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு ஏன் எனக்கு எய்ட்ஸ் தந்தாய் ? இப்படியாக நீண்டு கொண்டே போனது அந்த கட்டுரை. அதன் முடிவில் சொன்னார்:
இதனது தொடர்ச்சி அடுத்த வாரம்.
இதைப் படித்த மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினார்கள். அவர் என்னதான் பதில் தரப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.
அடுத்த வாரம் WHY ME PART II ஏன் எனக்கு மட்டும் பாகம்-2 வெளிவந்தது.
அதில் அவர் எழுதியிருந்தார்:
உலகில் 500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடத் துவங்குகிறார்கள்.
அதில் 50 லட்சம் பேர்தான் டென்னிஸ் கற்றுக் கொள்கிறார்கள்.
அதில் 5 லட்சம் பேர் தான் தொழில்முறை டென்னிஸ்க்கு வருகிறார்கள். அதில் 50,000 பேர் தான் சர்க்யூட் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் 5000 பேர் தான் கிராண்ட்ஸ்லாம் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் 50 பேர் தான் விம்பிள்டன் விளையாடுகிறார்கள்.
அதில் 4 பேர் தான் அரையிறுதிக்கு வருகிறார்கள்.
அதில் 2 பேர் தான் இறுதிப் போட்டிக்கு வருகிறார்கள்.
அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்.
அந்த வெற்றி பெற்ற ஒருவராக, அந்த வெற்றிக் கோப்பையைக் கையில் மகிழ்ச்சியோடு தாங்குபவராக என்னைக் கடவுள் ஆக்கிய பொழுது நான் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும்?" என்று.
வெற்றி மேல் வெற்றி தந்த பொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று. பேரும் புகழும் குவிந்தன. அப்போது கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.
பணம் மழைபோல கொட்டியது. அப்பொழுது கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.
அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க மாட்டேன். கடவுள் இதுவரை தந்ததை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அதுபோல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன். என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப் போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி.
என்று முடித்திருந்தார்.
இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
இன்பம், துன்பம் இரண்டையும் அவனே தருகிறான். இரண்டுமே நம் நன்மைக்குத்தான் என்று உணர்வோம். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை