இளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் !

“நாம் நினைத்த அளவுக்கு நம் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியவில்லையே என ஐம்பது வயதுக்குப் பிறகுதான் பலரும் உணர்கிறார்கள். ஆனால், இதனை இளம் வயதிலேயே உணர்ந்து,  நம்முடைய வளர்ச்சியைத் தடை செய்யும் பிரச்னைகள் என்னென்ன என்பதை அறிந்து மாற்றிக்கொள்வது நல்லது.

மாற்றம் என்பது உள்ளுக்குள் இருந்துதான் வரவேண்டும். தொடர் சிந்தனையின் மூலமே இந்த மாற்றம் என்பது சாத்தியமாகும். இந்தத் தொடர் சிந்தனை என்பதைப் பழக்கத்துக்குக் கொண்டு வரும்போது உங்களை அறியாமலேயே நீங்கள் முன்னேறுவீர்கள்” என்கிறார் `பொட்டன்ஷியல் ஜெனிசீஸ்’ மனித வள நிறுவனத்தின் அறிவாற்றல் மாற்றலுக்கான பிரிவின் தலைமை அதிகாரி ராமமூர்த்தி கிருஷ்ணா.

வளர்ச்சிக்கான தடைகளையும், அந்தத் தடைகளில் இருந்து எப்படி மேலே வருவது என்பது குறித்தும் அவர் பத்து வழிகளைச் சொல்கிறார்.



1. சிந்தனையைச் சரிசெய்வோம்

வாழ்க்கையில் நம் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம், நம் சிந்தனைதான். குழந்தைப் பருவத்திலும், பால்ய பருவத்திலும் நம்மைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்களும், நம்மைப் பாதித்த விஷயங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிந்து, நம் சிந்தனையைத் தடை செய்கின்றன. இவ்வாறு சிந்தனையைத் தடை செய்யும் விஷயங்களைக் கண்டறிந்து வெளியே எடுத்து வீசியெறிய வேண்டும். நாம் ஏன் மேலே வராமல் இருக்கிறோம், நாம் என்னென்ன தடைகளைச் சந்தித்திருக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். மருத்துவரிடம் சென்று நம் உடல் சார்ந்த பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, அந்தப் பிரச்னைகளைக் குணப்படுத்தத் தேவையான மருந்தை எடுத்துக்கொள்கிறோம். இதுபோல, நம் வளர்ச்சிக்கான பிரச்னைகளையும், தடைகளையும் சொல்லித் தீர்வுகளைத் தேட வேண்டும்.

2. தொடர்ந்து பயிற்சி செய்வோம்

உடலுக்கு நாம் தினமும் பயிற்சி தருகிறோம். ஆனால், நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மூளைக்கு நாம் எந்தப் பயிற்சியும் தருவதில்லை. நம் செல்போனில் ஆப்ஸையும், சாஃப்ட்வேரையும் அப்டேட் செய்கிறோம். ஆனால், நம் சிந்தனையை மட்டும் அப்டேட் செய்வதேயில்லை. அதைச் செய்தால் மட்டுமே நாம் எதையும் புதுமையாகப் பார்க்க முடியும்.

ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி, ‘இன்றைக்கு என்னால் என்ன முடியும்’ என்று யோசியுங்கள். கண்களை மூடி சிந்தனை செய்யுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, எப்படிச் செயல்படுத்துவது என்று பார்க்க வேண்டும். மூளைக்குத் தொடர்ச்சி யாக வேலைக் கொடுப்பதன் மூலமே சிறப்பான செயல்திறனை நம்மால் எட்ட முடியும்.

3. முயற்சி செய்தால் மட்டுமே முன்னுக்கு வரமுடியும்

எந்தப் பழக்கத்தையும் நாம் ஒரே நாளில் கற்றிருக்கமாட்டோம். பல நாள்கள் செய்தபின்பு, அது மூளையில் உள்ள நியூரல் செல்களில் பதிந்திருக்கும். நாம் எந்த விஷயத்தில் நிபுணராக வேண்டும் என்று விரும்புகிறோமோ, அந்த விஷயத்தைத் தொடர்ந்து செய்யும்போது, அது மூளையில் மாற்றத்தை உண்டாக்கும். தொடர்ந்து சிந்திப்பதால் மட்டுமே, நம்மால் எதனையும் சாதிக்க முடியும்.

4. என்னவாகப் போகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்

சிலர், இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வங்கி வேலைக்கு பரீட்சை எழுதுகிறார்கள்.  இவர்கள் எதற்காக இன்ஜினீயரிங் படிக்க வேண்டும்? சாதாரண படிப்பைப் படித்திருந்தாலே போதும். இதனால் நேரமும் பணமும் வீணானதே மிச்சம். நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று மட்டும் நீங்கள் இருந்துவிடக் கூடாது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்து, அதனை நோக்கிச் செல்ல வேண்டும்.

5. திறந்த மனதுடன் அணுகுவோம்

நம் கடந்த காலத்தை, திறந்த மனதுடன் அணுகி ஆராய வேண்டும். நான் இதையெல்லாம் சரியாகச் செய்ததால் வளர்ந்திருக்கிறேன் என்பது ஒரு வகை. நான் இன்னென்ன தவறுகள் செய்திருந்தாலும் கால ஓட்டத்தில் வளர்ந்து இருக்கிறேன் என்பது இன்னொரு வகை. நீங்கள் இரண்டாவது வகையில் இருந்து முதல் வகைக்கு மாற வேண்டும்.

6. நடைமுறையிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்

பொருள்களில் மாற்றத்தைக் கொண்டுவருவது போல, தனி மனித வளர்ச்சியிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ‘எனக்கு இதுதான் தெரியும், இப்படித்தான் இருப்பேன்’ என்று நீங்கள் இருந்தால், உங்களை ஏன் வேலையில் வைத்திருக்க வேண்டும் என்று நிறுவனம் யோசிக்கும். சின்ன பதவியில் இருந்து உயர் பதவிக்குச் செல்லும்போது அந்தப் பதவிக்கு தகுந்தாற்போல், உங்கள் செயல்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். உங்களிடம் இருக்கும் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் பொறுப்பு உணர்வைப் பார்த்து, மற்றவர்கள் அதைக் கற்றுக் கொள்கிற மாதிரி இருக்க  வேண்டும். இப்படியெல்லாம் நீங்கள் செய்யவில்லை எனில், நீங்கள் உயர்பதவியில் இருந்து ஒரு பயனும் இல்லை.



7. நிறுவனம் உங்களை வளர்க்காது

நிறுவனம் வளர்வதற்குத் தான் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படு வீர்களே தவிர, உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு நிறுவனம் உதவாது. உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வெளி நாடுகளில் சிலர் மாதக் கணக்கில் விடுமுறை போட்டுவிட்டு, தனியாக ஓர் இடத்துக்குப் போய் படிப்பார்கள். அறிவு சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடுவார்கள். நமக்கு விடுமுறை கிடைத்தால் நாம் என்ன செய்வோம் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

8. தடைகள் நமக்குத் தேவைதான்

தடைகளை நாம் எதிர்கொள்ளாமல் இருந்தால், அதனை உடைக்கும் வழி தெரியாமல் இருப்போம். தடைகளை உடைக்கப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் முன்னேற்றம். சவால்கள் இல்லை என்றால் வளர்ச்சி இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

8. முழுமையாகப் பயன்படுத்துவோம்

ஒரு சிலர் புத்தகங்களைப் படித்து நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், அதனைச் செயல்முறைக்குக் கொண்டுவர மாட்டார்கள். பொதுவாக, மேம்பாட்டுக்கு 10:20:70 என்ற முறையைச் சொல்வார்கள். 10% என்பது பயிற்சி மூலம் மேம்படுத்துவது. 20% ஆலோசனையின் மூலம் மேம்படுத்துவது. 70% நம்முடைய சுய சிந்தனையின் மூலம் மேம்படுத்துவது. மற்றவர்களின் ஆலோசனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாம், நம் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. நம் சிந்தனைகளை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் முழுமையான வளர்ச்சியை நம்மால் பெற முடியும்.

10. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துங்கள்

இன்றைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்கள் எல்லோரையும் எளிதாக இணைக்கிறது. இந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, உங்கள் சகாக்களுடன் வளர்ச்சிக்கான குறிக்கோளைப் பற்றி விவாதியுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு உதவுபவர்களை ஒரு குழுவாக மாற்றி, தொடர்ந்து விவாதியுங்கள். நீங்கள் நிச்சயம் முன்னேற்றம் காண்பீர்கள்’’ என்றார் ராமமூர்த்தி கிருஷ்ணா.

இவர் சொல்லும் எளிமையான வழிகளைப் பின்பற்றிப் பாருங்களேன்! 

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை