டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை

டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை
இந்த இணையம், மொபைல், செயலிகள், டிஜிட்டல் கருவிகள் எல்லாமே எந்நேரமும் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆம். என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விடுத்து இவற்றைப் பார்க்கச் செய்வதே இவற்றின் வேலை.

சமீபத்திய நரம்பியல் ஆய்வுகள் இவற்றின் மூலக்காரணங்களை ஆய்ந்து வெளியிட்டுள்ளன.

1. புதுத்தகவல்கள் மூளையில் டோபோமைன் எனும் வேதிப்பொருளை அளிக்கின்றன. இது மனத்திற்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.

2. மேலும் மேலும் மகிழ்ச்சி கிடைக்க அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக புதுத் தகவல்கள் வேண்டும்.

3. தொடர்ந்து புதுத்தகவல்கள் அளிக்கும் டிஜிட்டல் கருவிகள் மேலும் மேலும் டோபோமைனைது தூண்டி நம்மை ஒரு போதைக்கு அடிமையாக்கி விடுகின்றன.

ஒவ்வொரு புது மின்னஞ்சலும், புது ட்வீட், புது முகநூல் செய்தியும் கொஞ்சம் டோபோமைன் தருகின்றன. உற்சாகமாக உணர்கிறோம். விரைவில் இது பழகி விடுகிறது. அதிக மகிழ்ச்சிக்கு அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக செய்திகள் வேண்டும். நிமிடத்துக்கு ஒரு முறை மின்னஞ்சல், டோபோமைன், டுவிட்டர், டோபோமைன், முகநூல், டோபோமைன். இது ஒரு தொடர் சுழற்சியாகி விடுகிறது. புகைப்பிடித்தல், சாராயம் போன்றதை விட அதிக அளவில் போதை தந்து நம்மை அடிமையாக்கி விடுகின்றன இந்தக் கருவிகள்.



மரண போதை
எலிகள் மீதான ஒரு ஆய்வு பற்றி படித்தேன். ஒரு பட்டனைத் தொட்டால் சிறு மின்சார அதிர்வு வருமாறு எலிகளை இணைத்தனர். அந்த அதிர்வு எலிகளின் மூளையில் டோபோமைனைத் தூண்டுமாறு அமைக்கப்பட்டது.

அந்த எலிகள் உணவை மறந்து பட்டனை அழுத்திக் கொண்டிருந்தன. கலவியை மறந்து பட்டனுக்கு அடிமையாகக் கிடந்தன. ஒரு மணி நேரத்தில் 700 முறைக்கு மேல் பட்டனை அழுத்தின. இறுதியில் பட்டனை அழுத்தியபடியே இறந்தே விட்டன.

எனது மொபைல் பட்டனும் இது போலத்தானே. அடிக்கடி அதைத்தடவி, புது செய்தி பார்த்தே ஆக வேண்டும்.

மொபைலைத் தாண்டி வெளியே ஒரு அழகான உலகம், மக்கள் இருப்பதோ, எனக்கான வேலைகளோ, படிக்க விரும்பும் புத்தகங்களோ என் கண்களுக்குத் தெரிவதே இல்லை.


அடிக்கடி ஒரு வேலையில் இருந்து வேறு வேலைக்கு கவனத்தை மாற்றுவதால், மூளைத்திறன் குறைகிறது. ஆனால் ஒரே வேலையில் கவனத்தைக் குவித்தால், மூளைத்திறன் அதிகரிக்கிறது. வேலையை ஒழுங்காகச் செய்து முடித்தால் வரும் திருப்தியும் மகிழ்ச்சியும் அலாதியானது. (The Organized Mind, by Daniel J Levitin)


என்னதான் பிரச்சனை?
எனக்கு என்னதான் பிரச்சனை என்று கண்டு பிடித்து விட்டேன்.

1. இணையக் கருவிகள் தரும் அளவுக்கு அதிகமான டோபோமைனுக்கு என் மூளை பழகி விட்டது. அதனால் புத்தகங்களைக் கூடப் படிக்க முடிவதில்லை.

2. இந்த டோபோமைன் போதையால், என்னால் வேலையில், குடும்பத்தில், விளையாட்டில், குழந்தைகளுடன் என எதிலுமே முழு கவனம் செலுத்த முடிவதில்லை.

இதுதான் எனக்கு உள்ள பெரிய பிரச்சனை.

தொலைக்காட்சி
தொலைக்காட்சி, தொல்லைக்காட்சியாகி ரொம்ப காலம் ஆகி விட்டது. அதில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் வந்தாலும், நாம்தான் அவற்றைப் பார்க்காமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கி விடுகிறோம்.

சில வருடங்களாகவே என் மாலைப் பொழுது கழிவது இப்படித்தான். வேலையில் இருந்து வீட்டுக்கு வருவது, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, நான் சாப்பிடுவது, குழந்தைகளைத் தூங்க வைப்பது. இதற்கே பெரும் அசதி. பிறகு தொலைக்காட்சி பார்ப்பது. இடையே மின்னஞ்சல். பின் தூங்கப் போவது. அங்கேயும் மின்னஞ்சல், பின் டுவிட்டர், முகநூல். கடும் அசதி. வெறுமை. பின் எனக்கே தெரியாமல் தூங்கிப் போவது.

புத்தகம் படிப்பவர் தம் உலகை வெல்கிறார். தொலைக்காட்சி பார்ப்பவர் தம் உலகை இழக்கிறார் - (Werner Herzog)
உண்மைதான். புத்தகங்கள் போல எனக்கு அறிவூட்டிய, என்னைப் பண்படுத்திய, புதுக் கருத்துகள் அளித்து, புது மனிதனாக உயர்த்திய, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் இதுவரை பார்த்ததில்லை.

மாற்றம், முன்னேற்றம்
இந்த ஆண்டு ஜனவரி முதல், சில மாற்றங்களைச் செய்து வருகிறேன். அவை,

1. வேலை நேரத்தில் டுவிட்டர், முகநூல், செய்திகள் என எதுவுமே கிடையாது.

2. சும்மா வெறுமனே இணையத்தை மேய்ந்து, கண்ட கட்டுரைகளைப் படிக்கக்கூடாது.

3. படுக்கையறையில் தொலைக்காட்சி, திறன் பேசி, இணையக் கருவிகள் எதுவும் கூடாது.

4. இரவு உணவுக்குப் பின் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.

5. மாறாக, படுக்கையறைக்கு ஒரு புத்தகம் அல்லது கிண்டில் மின்னூல் கருவியைக் கொண்டு செல்ல வேண்டும். தினமும் படிக்க வேண்டும். இதை ஒரு தவம் போல உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

மிக விரைவாகவே, புத்தகம் படிக்கும் பழக்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. வார்த்தைகள், வரிகள், பத்திகள், பக்கங்களில் கவனம் செலுத்துவது கடினம் என்று நினைத்தேன். இணைய இடையூறுகள் ஏதும் இல்லாததால், கவனம் செலுத்துவது நினைத்ததை விட, எளிதாகவே உள்ளது. மொபைல் இல்லை, டுவிட்டர் இல்லை, முகநூல், மின்னஞ்சல், தொலைக்காட்சி என தொல்லைகள் எதுவுமே இல்லை. நானும் புத்தகமும் மட்டும்தான். மீண்டும் புத்தகங்கள் காட்டும் புதுப்புது உலகங்களில் உலாவத் தொடங்கினேன்.

மிக அற்புதமான நாட்கள் இவை.

இத்தனை ஆண்டுகள் படித்ததை விட மிக அதிகமாகப் படித்து வருகிறேன். செய்யும் செயல்கள் யாவிலும் அதிக கவனத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறேன். என்னால் முழுமையாக டோபோமைன் போதையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. செயல்பாட்டிலும் காண முடிகிறது. புத்தகங்கள் கவனச் சிதறலை நீக்கி, ஒருமுகமான மனதை அளிப்பதை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

புத்தகங்கள் என்னை இணைய போதையில் இருந்து மீட்டு, புது மனிதனாக்கி உள்ளன. நீங்களும் விரைவில் இணைய போதையில் இருந்து விடுபட்டு, புத்தகங்களில் உலகில், உங்களைத் தொலைக்க அழைக்கிறேன்.

வேலை நேரத்தில், அடிக்கடி மின்னஞ்சல் பார்ப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே சிக்கல். அதையும் விரைவில் தீர்த்து விடுவேன்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY