ஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்!

உன்னால் முடியும்!ஆர். ஜெயலெட்சுமி
கிராமத்துப் பெண்களுக்குக் கல்வி தரும் முன்னேற்றம்... கண்ணுக்கும் கருத்துக்கும் பேரழகு! குறிப்பாக, ஐ.டி துறைப் பணிகளில் சேரும் சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள், குறுகிய காலத்திலேயே கைநிறைய சம்பளத்துடன் ஊருக்குள் தங்கள் குடும்பங்களை உயர்த்திக்காட்டும் காட்சிகள் இப்போது காணக்கிடைக்கின்றன. ஆனாலும், மெட்ரோபாலிட்டன் நகரத்து ஹைடெக் அலுவல் சூழல், இந்தப் பெண்களுக்குத் தரும் தயக்கங்களும் தடைகளும் பிரச்னைகளும் நிறைய.

  


கலாசார அதிர்ச்சி, ஆடை மற்றும் ஆங்கில அறிவு விஷயத்தில் கொள்ளும் தாழ்வுமனப்பான்மை, சக ஊழியர்களுடன் இயல்பாகப் பழகுவதில் உள்ள இடைவெளி... ஐ.டி பணியில் இருக்கும் கிராமத்துப் பெண்களின் பிரதானப் பிரச்னைகள் இவை. இந்தப் பிரச்னைகளைக் களையும் வழி சொல்கிறார்கள், அனுபவசாலிகளும் துறைசார்ந்த நிபுணர்களும்.

``திறமையை நிரூபிச்சுட்டா அங்கீகாரம் நிச்சயம்!’’    
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்துராஜி, ``இதுவரை பிரபலமான மூன்று ஐ.டி நிறுவனங்கள்ல வேலைபார்த்திருக்கேன். இப்போது குழந்தைக்காகக் கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். இன்ஜினீயரிங் படிக்கும்போது கேம்பஸ் இன்டர்வியூல தேர்வாகிச் சென்னைக்கு வந்தேன். எங்க காலேஜ்லேயே சாஃப்ட் ஸ்கில்ஸ் பயிற்சி எல்லாம் கொடுத்துதான் அனுப்பினாங்க. ஆனாலும், இங்க வந்ததும் அதிர்ச்சியைத் தவிர்க்க முடியல. இங்கிலீஷ் பேசுவேன்னாலும், இங்க இருக்கிறவங்க மாதிரி சரளமா பேச வராது. நான் எல்லோரையும் ‘சார்’, ‘மேம்’னு கூப்பிட்டா, ரொம்பவும் சீனியர்ஸ்கூட, ‘தயவுசெஞ்சு சார்னு கூப்பிடாதே. பேர் சொல்லிக் கூப்பிடு’னு சொல்வாங்க.

நான் ரெண்டு பக்கமும் துப்பட்டாவை பின் பண்ணிட்டுப் போறது இங்கே கேலியா இருக்கும். உடை விஷயத்துல என் எல்லைக்குட்பட்டு நிறைய மாத்திக்கிட்டேன்.

நான் நல்லா வேலை பார்ப்பேன். ஆனாலும், லீடர்ஷிப் எடுக்கிறதுல தயக்கம் இருந்தது. ஒரு கட்டத்துல, ‘நம்மகிட்ட திறமை இருக்கு... நாம ஏன் தயங்கணும்’னு தோணுச்சு. ஒன்பது வருஷம் வேலை பார்த்ததுல, கடைசி நாலு வருஷமாதான் லீடர்ஷிப்புக்குள்ள வந்தேன். ஆனாலும், ஆரம்பத்துல ஹைஃபை கல்ச்சர்ல வர்ற பசங்ககிட்ட எனக்கு வேலை வாங்கத் தெரியல. எனக்குக் கீழே இருக்கிறவங்க வேலை செய்யலைன்னா, நானே செஞ்சுடுவேன். நிறுவனத்துல, நாம என்னென்ன திறனில் எல்லாம் பின்தங்குறோமோ, அதுக்கெல்லாம் பயிற்சி கொடுப்பாங்க. அதை முழுமையா பயன்படுத்திக்கிட்டேன். அப்படி லீடர்ஷிப் ட்ரெயினிங் எடுத்ததுக்கு அப்புறம், என் அணுகுமுறை மேம்பட்டது.

மொத்தத்துல, வெளியூர்ல இருந்து வர்ற பொண்ணுங்களுக்கு ஆரம்பத்துல தடுமாற்றங்கள் இருந்தாலும், திறமையை நிரூபிச்சுட்டா நிர்வாகம் நிச்சயம் அவங்களுக்கான அங்கீகாரத்தைத் தரும். ஒழுங்கா பெர்ஃபார்ம் பண்ணாதவங்களைத்தான் ‘ஆன் பென்ச்’ல (காத்திருப்பு) போடுவாங்க. ‘லே ஆஃப்’னு (வேலை நீக்கம்) வர்றப்போ, ‘ஆன் பென்ச்’ல இருக்கிறவங்களைத்தான் முதல்ல வேலையைவிட்டுத் தூக்குவாங்க. நம்மை நிரூபிச்சுட்டே இருக்கிறவரைக்கும் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சொல்லப்போனா, ஊர்ப்பக்கம் இருந்து வர்ற பொண்ணுங்க வேலைல சின்சியரா இருப்பாங்க’’ என்கிறார் பெருமையுடன்.

``ஊருக்கே திரும்பிப் போயிடலாமானு நினைச்சிருக்கேன்!’’   
சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார் தீபா. ``என் சொந்த ஊர் ஆண்டிப்பட்டி பக்கத்துல இருக்கிற முள்ளனப்பட்டி. படிச்சது தமிழ் மீடியம். பெரியகுளம் அன்னபாக்கியம் கல்லூரில பி.எஸ்ஸி மேத்ஸ் படிச்சு, கேம்பஸ் இன்டர்வியூல தேர்வாகி, சென்னைக்குக் கிளம்பினேன். வேலைக்குச் சேர்ந்த புதுசுல எல்லாரையும் நான்  ‘அக்கா’, ‘அண்ணா’னு கூப்பிட்டதும் என்னை இங்க இருக்கிறவங்க வித்தியாசமா பார்த்தாங்க. அவங்க பேசுற ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்க முடியாம, ஆபீஸுக்குப் போகவே பயமா இருந்தது. பேசாம ஊருக்கே திரும்பிப் போயிடலாமானு நினைச்சிருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்தான் ஆறுதல் சொல்வாங்க. ஒருகட்டத்துல, ஆடை, ஆங்கிலம்னு நாம பார்த்து மிரளும் பலர், வேலையில் நம்மைவிட பின்தங்கித்தான் இருக்காங்கன்னு புரியவந்தப்போ, என் தன்னம்பிக்கை தானா அதிகரிக்க ஆரம்பிச்சது. வேலையை அதிக ஈடுபாட்டோட, கவனத்தோட, படிப்படியா கத்துக்கிட்டேன். இப்போ இந்த அலுவலகச் சூழல் எனக்குப் பழகிருச்சு. தேவையில்லாத மிரட்சி நீங்கிருச்சு. அடுத்தகட்டத்தை நோக்கிய திட்டமிடல்னு தெளிவும் தன்னம்பிக்கையும் கிடைச்சிருக்கு” என்கிறார் திடமாக.

‘`தேடித் தேடிக் கத்துக்கணும்!”    
பெங்களூரில் உள்ள ‘நியூ ஸ்ட்ரீட் லேர்னிங்’ ஐ.டி நிறுவனத்தில் டெவலப்பராகப் பணிபுரிகிறார் லாவண்யா.
``தர்மபுரி பக்கத்துல இருக்குற சி.எம் புதூர் கிராமம்தான் என் சொந்த ஊர். கிருஷ்ணகிரியில இருக்கிற அரசு உதவி பெறும் பள்ளி, பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங்னு படிச்சுட்டு, ஒரு வருஷமா பெங்களூருல வேலை பார்க்கிறேன். பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரினு படிச்சு வந்த என்னை, இந்த நகரம் ஆரம்பத்துல ரொம்ப முகம் சுளிக்க வெச்சது. கை நிறைய சம்பாதிச்சு, ரொம்ப ஆடம்பரமா செலவு செய்றதைப் பார்த்து அதிர்ந்துட்டேன்.

அலுவலகத்தைப் பொறுத்தவரை, ஸ்பீடா ஆங்கிலம் பேச வராததால, புரியாத விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கக்கூடத் தயக்கமா இருக்கும். காலேஜ்ல கம்ப்யூட்டர் கோடிங் பாடத்துல நிறையப் பகுதிகளை சாய்ஸ்ல விட்டது தப்புனு தோணுச்சு. அதையெல்லாம் இங்க மறுபடியும் கத்துத் தர மாட்டாங்க. நமக்குத் தெரியும்னு விட்டுருவாங்க. ஐ.டி கம்பெனியில வேலைபார்க்கிறதுக்கு செல்ஃப் லேர்னிங் ரொம்ப அவசியம். ஒரு விஷயத்தைத் தெரிலைன்னு சொன்னா, லிங்க் அனுப்பி ‘கத்துக்கோ’னு சொல்லிடுவாங்க. துறை சார்ந்த விஷயங்களை நாமதான் தேடித் தேடிக் கத்துக்கணும்.

சிட்டியில இருக்கிறவங்க சரியா வேலை பார்க்கலைன்னாக்கூட சூழலைச் சமாளிக்கிற திறனோட இருப்பாங்க. ஆனா, கிராமத்துல இருந்து வர்ற பொண்ணுங்க நல்லா வேலை பார்த்தாலும், சூழலைச் சமாளிக்கத் திணறுவாங்க. அதையும் நாம கத்துக்கிட்டா, எதற்கும் பயமில்லை’’ என்கிறார் லாவண்யா தன் அனுபவத்தில்.

பட்டப்படிப்பு முடித்துப் பெருநகரங்களுக்குக் குடிபெயரவிருக்கும் பெண்களே, தயக்கத்தை உதறுங்க... சாதிக்கலாம். ஆல் த பெஸ்ட்!

``மாற்றுத் திட்டம் முக்கியம்!”

.டி நிறுவனங்களில் நிகழும் ‘ஆன் பெஞ்ச்’, ‘லே ஆஃப்’ சவால்கள் பற்றிச் சொல்கிறார், ஐ.டி பணியாளர் மன்றச் செயற்குழு உறுப்பினர் பிரவீன்.

 ‘’ ‘ஆன் பென்ச்’, ‘லே ஆஃப்’க்கு எல்லாம் பெர்ஃபார்மன்ஸ் மட்டுமே காரணமா இருக்காது. அதிகமா சம்பளம் வாங்குற ஒருத்தரை வேலையை விட்டு அனுப்பிட்டு, அவங்களுக்குப் பதிலா அதே சம்பளத்தில் ரெண்டு, மூணு ஃப்ரெஷர்ஸை எடுக்கறது, குறிப்பா மார்ச் முதல் ஆகஸ்ட்டில் பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைச்சுக் காட்டி, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் குறைச்சுக் கட்டுறதுனு இதுக்குப் பின்னாடி வேறு காரணங்களும் இருக்கு. அதனால நல்லா வேலை பார்த்தாலும் ‘லே ஆஃப்’ என்ற விஷயத்தை எதிர்கொள்ளத் தயாரா இருக்க வேண்டியது காலத்தின் அவசியம். ‘இந்த வேலை இல்லைன்னா அடுத்த என்ன?’ என்ற கேள்விக்கான பதிலுக்கும் எப்போதும் தயாரா இருக்கணும்!” 

``சேமிப்பு அவசியம்!”

காயத்ரி அருண், உளவியல் நிபுணர், சென்னை 


``அதிக மன அழுத்தம் நிறைந்த ஐ.டி துறைச் சூழலைச் சமாளிக்க யோகா, தியானம் என்று பெண்கள் பழகிக்கொள்ளலாம். அதிகம் சம்பளம் பெறும் ஐ.டி துறைப் பெண்கள், அதற்கேற்ப சேமிப்புப் பழக்கத்தை கைகொள்ள வேண்டும். வருமானத்தைச் சிறப்பான முதலீடுகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

`இந்த வேலைதான் நமக்குக் கடைசி வரை’ என்று நினைத்துக்கொள்ளாமல், `அடுத்து என்ன படிக்கலாம், என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன’ என்ற தேடல் தேவை. ஒருவேளை வேலை பறிபோனால்கூட, எந்தச் சூழலிலும் நம்மால் வாழ முடியும் என்ற மனநிலையை வளர்த்துக்கொள்வது அவசியம்.

துறையை மாற்றுவதிலும் தவறில்லை. எம்.பி.ஏ., பி.டெக் பட்டதாரிகள் தொழில் துறை முயற்சிகளைச் செய்யலாம். `லே ஆஃப்’ காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தத்தில் இருக்கும்போது அடுத்த வேலை தேடுவதைத் தவிர்த்து, ஒரு பிரேக் எடுத்து ரிலாக்ஸ் செய்துகொண்டு, பின்னர் முயற்சிகளை ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு வீட்டினரின் அனுசரணை அவசியம். 

நம்முடைய திறனில் நம்பிக்கை கொள்வோம்... திசைகள் திறக்கும்!” 


Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை